ஈராக்கில் பாஸ்ரா மார்க்கெட் பகுதியில் கார்குண்டுத் தாக்குதல்: 28 பேர் பலி
ஈராக்கில் உள்ள பாஸ்ரா மார்க்கெட் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை கார்குண்டுத் தாக்குதலில் 28 பேர் பலியாகினர். ஈராக் தலைநகர் பாக்தாத்தை அடுத்து அங்கு இரண்டாவது பெரிய நகரமாகக் கருதப்படுவது பாஸ்ரா நகரமாகும். மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பாஸ்ரா நகரின் சந்தைப் பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில், ஒரு காரில் நிறைய வெடிமருந்துப் பொருட்களை ஏற்றிய தற்கொலைப் படைத் தீவிரவாதி ஒருவன், அக்காரை வேகமாக ஓட்டி வந்து வெடிக்கச் செய்தான். இந்த திடீர் கார்குண்டு வெடிப்பால் அந்த இடமே ரத்தக்களறியானது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த மார்க்கெட் பகுதியில் கார் குண்டு வெடித்ததால் 28 பேர் உடல்சிதறி பரிதாபமாக பலியாயினர். 62 பேர் பலத்த ரத்தக் காயங்களுடன் உயிர் தப்பினர். இருப்பினும் இந்த கொடூரத் தாக்குதலுக்கு யார் காரணம் என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் சமீபகாலமாகவே பாஸ்ரா நகரில் வன்முறை வெறியாட்டங்களும், தீவிரவாதத் தாக்குதல்களும் நடந்து வருவதாக போலீஸ் கேப்டன் முஷ்தக் காதீம் தெரிவித்தார்
மேலும் ஷியாப் பிரிவு முஸ்லீம்கள் அதிகமாக வசித்துவரும் இந்நகரில் கடந்த வாரம்தான் பிரதமர் நௌரி அல்_மாலிக்கி வன்முறை வெறியாட்டங்களை தடுக்கும்பொருட்டு 1 மாத கால அவசரநிலை பிரகடனத்தை அறிவித்திருந்தார். மேலும் ஜோர்டானியனில் பிறந்து வளர்ந்த சதிகாரன் அபு முஸாப் அல்_ஷர்க்காவி, ஷியாப்பிரிவு முஸ்லீம்களை கொல்வதற்காக, ஈராக்கின் சன்னிப் பிரிவு அராபியர்களை சந்தித்த ஒருநாள் கழித்து இந்த தாக்குதல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் அல்_ஷர்க்காவியின் அல்_கொய்தா படையினர்தான் ஈராக்கில் மிகவும் பயங்கரமான பல தாக்குதல்களை நடத்தியிருப்பதாகத் பொறுப்பேற்றுள்ளனர். அவர்கள் நடத்திய தாக்குதலில் மட்டும் இதுவரை 100_க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியிருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இது தவிர்த்து, ரஷ்யத் தூதரக அதிகாரி ஒருவர் ஈராக்கில் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 4 தூதரக ஊழியர்கள் கடத்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்றும் கூட ஷியாப்பிரிவு முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் சதார் நகரத்திற்கு அருகில் உள்ள ஒரு ஏரியாவில் தகவல் தொடர்பு தொடர்பான பணிகளை கவனிப்பதற்காக ஒரு மினி பஸ்ஸில் சென்ற ஊழியர்களை குறிவைத்து தீவிரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானதாகவும் 2 பேர் காயமடைந்ததாகவும் கலோனல் ஹாசன் சாலோப் தெரிவித்தார்.