உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்: ஈரான் திட்டவட்ட அறிவிப்பு
யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த தவறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்ற வல்லரசு நாடுகளின் எச்சரிக்கையை ஈரான் அதிபர் முகமது அகமது நிஜாதி நிராகரித்து விட்டார்.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள ஐந்து வல்லரசு நாடுகள் மற்றும் ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர்கள் வியன்னாவில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர்.
இன்னும் சில வாரங்களில் அணுசக்தி திட்டங்களை கைவிட வேண்டும். யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும். இவற்றை ஏற்றுக்கொண்டால் சலுகைகள் வழங்கப்படும் என அவர்கள் கூறினர்.
ஈரான் மறுத்தால் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஈரான் அரசு செய்தி நிறுவனத்திடம் பேசிய அதிபர் முகமது அகமதி நிஜாத், மேற்கத்திய நாடுகளின் நிர்ப்பந்தத்திற்கு ஈரான் பணியாது என்றார்.
இதனிடையே ஈரானுக்கு காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறினார். யோசனைகளை ஈரான் ஏற்க மறுத்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.