ஜெயிலுக்குள் வந்து இறங்கிய ஹெலிகாப்டரில் ஏறி 2 கைதிகள் தப்பினார்கள்
கிரீஸ் நாட்டில் சினிமா பாணியில், ஜெயிலுக்குள் வந்து இறங்கிய ஹெலிகாப்டரில் ஏறி 2 கைதிகள் தப்பினார்கள். கிரீஸ் நாட்டில் கடத்தல், வங்கிக் கொள்ளை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதற்காக வஸ்சிலீஸ் பலேக்கோஸ் டாஸ் என்பவருக்கு 25 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் ஏதென்ஸ் நகரில் உள்ள கொரிடல்லாஸ் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
40 வயதான அவர் சிறையில் இருந்து தப்பிக்க விரும்பினார். இதற்காக தன் தம்பியின் உதவியை நாடினார்.
அவர் தம்பியும் ஒரு கிரிமினல் தான். அவர் ஒரு ஹெலிகாப்டரில் ஏறி, அதன் விமானியை துப்பாக்கி முனையில் மிரட்டி சிறைக்குள் தரை இறங்கும்படி கட்டாயப்படுத்தினார். அதன்படி ஹெலிகாப்டர் சிறைக்குள் இறங்கியதும், வஸ்சிலீஸ், அதில் ஏறிக்கொண்டார். அவரது நண்பரான இன்னொரு கைதியும் ஹெலிகாப்டரில் ஏறினார்.
அதன்பிறகு ஹெலிகாப்டர் அங்கு இருந்து புறப்பட்டது. அருகில் உள்ள இடுகாட்டில் ஹெலிகாப்டர் இறங்கியது. 2 கைதிகளுடன் கடத்தல்காரர்கள் இறங்கிக் கொண்டார்கள். அதன்பிறகு அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.
திடீர் சோதனைக்காக அமைச்சரக அதிகாரிகள் தான் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி இருக்கிறார்கள் என்று ஜெயில் அதிகாரிகள் நினைத்து விட்டதால் தான், கைதிகள் எளிதில் தப்ப முடிந்தது. தப்பி ஓடிய கைதிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.