அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அல்லைப்பிட்டி மக்களுடன் நேரில் சந்திப்பு
யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள அல்லைபிட்டி மக்களை, அவர்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள யாழ். அடைக்கலமாதா தேவாலயம், நாவாந்துறை புனித நீக்கிலார் தேவாலயம் அகிய இடங்களுக்கு, ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இன்று காலை சந்தித்து உரையாடியுள்ளார்.
மக்களுடன் நேரடியாக கலந்துரையாடிய அமைச்சர் மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார். இச்சந்திப்பின்போது பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படும் பட்சத்தில் தாம் தமது இருப்பிடங்களில் மீளக்குடியமர்வதற்கு தயாராக இருப்பதாக, அமைச்சருடன் மனம்விட்டுப் பேசிய மக்கள் தெரிவித்தனர்.
மக்களின் மேற்படி கோரிக்கைக்கு அமைய அமைச்சர் அவர்கள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்பு கொண்டு உடனடியாக மக்களின் பாதுகாப்புக்கு உரிய உத்தரவாதத்தை வழங்குவதற்கும், மீண்டும் அவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
அத்துடன் மக்களின் சார்பில் தெரிவிக்கப்பட்ட மின்சாரம், மருத்துவம் மற்றும் கடற்தொழில் ஆகிய விடயங்கள் குறித்தும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், கடற்தொழிலில் ஈடுபடுபவர்களின் நன்மை கருதி விசேட பாதுகாப்பு அனுமதியை பெற்றுத் தருவதற்கும் ஏற்பாடுகளைச் செய்து தருவதாக உறுதி கூறினார்.