அவசரகால சட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் -சர்வதேச மன்னிப்புசபை
இலங்கையில் அவசரகால சட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தத்தின் பின்னரான இலங்கை பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை முடிவுறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெ தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 7வது பாராளுமன்ற பூர்வாங்க அமர்வுகள் எதிர்வரும் 22ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. 1971ம் ஆண்டு முதல் அநேக சந்தர்ப்பங்களில் அவசரகால சட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது பயங்கரவாத தடைசட்டம் மற்றும் ஏனைய அவசரகாலச் சட்டங்கள் ரத்துச் செய்யப்பட்டு மனிதஉரிமை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்தின் மூலம் மக்களை சட்டவிரோதமான முறையில் கைது செய்து தடுத்து வைப்பதற்கு கடத்தல்களை மேற்கொள்ளவும் வழிகோலுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 30 வருடத்தில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் எவ்வித குற்றச்சாட்டுகளுமின்றி சிறைத்தண்டனை அனுபவித்து வந்ததாக சுட்டிக் காட்டப்படுகிறது ஊடகவியலாளர்கள் அரசியல் எதிராளிகள் மற்றும் தொழிற்சங்கங்களை அடக்கவும் அவசரகாலச் சட்டத்தை அரசாங்கங்கள் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்ய புதிய பாராளுமன்றம் அழுத்தம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Average Rating