35பேர் கொண்ட புதிய அமைச்சரவை டி.எம்.ஜயரட்ண புதிய பிரதமர்..
இலங்கையில் புதிய நாடாளுமன்றம் நாளை கூடிய பின்னர் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை 35பேர்கொண்ட புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் எனத் தெரிய வருகிறது. புதிய அமைச்சரவையில் பிரதமர் பதவி ஆளும்தரப்பின் சிரேஷ்ட உறுப்பினரான டி.எம்.ஜயரட்ணவுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. சுமார் 35பேர் கொண்ட புதிய அமைச்சரவையில் ஆக இரண்டே இரண்டு புதிய முகங்கள் இடம்பெறும் என்றும் ஏனைய அமைச்சர்கள் பழைய முகங்களாக இருப்பர் என்றும் தெரிவி;க்கப்படுகிறது. ஆளும்தரப்பில் கம்பஹா மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற பஷில் ராஜபக்ஷவும் கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற விமல் வீரவன்சவுமே புதிதாக அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கப் போகின்றவர்கள் என்று அறியப்படுகிறது. இந்த இருவரையும் தவிர ஏனைய அமைச்சர்கள் அனைவரும் முன்னர் அமைச்சப் பதவிகளை வகித்தவர்களாகவே இருப்பர் என்றும் கூறப்படுகிறது. பிரதமர் பதவிக்கு டி.எம்.ஜயரட்ண நியமிக்கப்பட்டாலும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் அவரது சகோதரருமான பஷில் ராஜபக்ஷவுக்கு அமைச்சரவைக்குள் அதிகப்படியான சில பொறுப்புக்கள் வழங்கப்படும் என்றும் தெரியவருகிறது ஜனாதிபதியின் அலுவலக அமைச்சர் என்ற கோதாவில் சில அமைச்சர்களை நியமிக்க உத்தேசிக்கப் பட்டுள்ளதாகவும் அந்த வகையில் வெளிவிவகார விடயங்களையும் கண்காணிக்கும் பொறுப்புகள் பஷிலுக்கு வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதால் ஒவ்வொரு அமைச்சரின் கீழ்வரும் துறைகளின் விரிவும் பரப்பும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating