நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதற்கு அடுத்த சில மாதங்களில் நடவடிக்கை
நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதற்கு அடுத்த சில மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படுமென்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய இலங்கைக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை உள்ளடக்கியும் விகிதாசாரத் தேர்தல் முறையை மாற்றி அரசசேவையை செயல்திறன் மிக்கதாக்கும் வகையில் சட்டங்களைத் திருத்தியமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுயாதீன ஆணைக்குழுக்களை செயற்படுத்தவும் ஆணையாளர்கள் வினைத்திறனுடன் பணியாற்றுவதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்வதுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையிலும் மாற்றம் செய்யப்படுமென அவர் கூறியுள்ளார். கிராமத்து மக்களுக்குப் பணியாற்றுவதற்குப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதியினை ஒதுக்குவதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, இப்போது முழுப் பிரதேசத்திற்குமாகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள் என்றும் அந்நிலையைத் தோற்றுவித்த விருப்புவாக்கு முறைமை இல்லாமற் செய்யப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating