அலங்கார விளக்குகளுக்கு தடை: சோயப் குடும்பத்தினர் எரிச்சல்
சோயப் – சானியா மிர்சா வரவேற்பிற்காக, அலங்கரிக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் எரியக்கூடாது’ என, பாகிஸ்தான் அரசு நிர்வாகத்தினர் தடை போட்டனர். இதனால், எரிச்சல் அடைந்த சோயப் குடும்பத்தினர் அலங்கார மின் விளக்குகளை எல்லாம் அகற்றினர்.இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை, சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் மணந்தார். இவர்களது திருமண வரவேற்பு, சோயப்பின் சொந்த ஊரான பாகிஸ்தான் சியால்கோட்டில் இன்று நடக்கிறது. இதற்காக அங்குள்ள சோயப்பின் வீடு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மின் பற்றாக்குறை காரணமாக, பாகிஸ்தான் அரசு மின் சிக்கன நடவடிக்கையை தீவிரமாக கடைப்பிடித்து வருகிறது. வாரத்துக்கு இரண்டு நாட்கள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. இதுபோல பலவழிகளில் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.இந்நிலையில், வரவேற்பு நிகழ்ச்சிக்காக, சோயப் வீடு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததை அறிந்த, குஜ்ரன்வாலா மின்வினியோக நிறுவன அதிகாரிகள், உடனடியாக அங்கு விரைந்தனர். அலங்கார மின்விளக்குகளை எல்லாம் அகற்றும் படி கேட்டுக் கொண்டனர். தங்கள் உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கூறினர். ஆனால், சோயப் வீட்டார் இதை ஏற்கவில்லை.சோயப்பின் உறவினர் இம்ரான் ஜாபர், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண உயரதிகாரிகளுக்குப் போன் செய்து, அதிகாரிகளின் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முயற்சித்தார்.
அவர்களோ, ‘யாராக இருந்தாலும் அரசின் மின் சிக்கன நடவடிக்கையை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்’ எனக் கூறி இந்த விவகாரத்தில் தலையிட மறுத்து விட்டனர்.இதனால், எரிச்சல் அடைந்த சோயப் குடும்பத்தினர், அலங்கரிக்கப்பட்டிருந்த மின் விளக்குகளை எல்லாம் அகற்றினர். ‘திருமண வரவேற்பு நிகழ்ச்சியை இருட்டில்தான் நாங்கள் கொண்டாட வேண்டும் என, பாகிஸ்தான் அரசு விரும்பினால், அதற்கும் நாங்கள் தயார்தான்’ என, கோபத்துடன் கூறினார் இம்ரான் ஜாபர்.
Average Rating