பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது குறித்து இந்திய மத்திய அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் ‐ சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் சிகிச்சை பெற விடுதலைப்புலிகள் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது குறித்து இந்திய மத்திய அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை சென்றிருந்தார். அவர் விமான நிலையத்தில் வைத்து மீண்டும் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இதனை எதிர்த்து தமிழக சட்டத்தரணி கருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16ஆம் திகதி மலேசியாவில் இருந்து சென்னை சென்ற பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். விசா உள்ளிட்ட உரிய அனுமதியுடன் சென்ற பார்வதி அம்மாளை, இந்தியாவுக்குள் அனுமதிக்காகதது சர்வதேச மனித உரிமை மீறல். இதனால் பார்வதி அம்மாளை தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை அழைத்து வர இந்திய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கருப்பன் தனது மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் இந்திய மத்திய அரசே ஏற்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது தமிழக அரசாங்கத்தின் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ஜெயசிங், இந்த வழக்கில் மத்திய அரசையும், மாநில அரசையும் பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார்கள். பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் கிடையாது. வெளிநாட்டவர்கள் வருகையும், அனுமதி வழங்குவதும் இந்திய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளாவதாகும். எனவே மாநில அரசை இந்த வழக்கில் சேர்க்க கூடாது எனக் கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,வழக்கில் இருந்து தமிழக அரசை நீக்க உத்தரவிட்டனர். பின்னர் நடந்த வாதத்தில் இந்திய மத்திய அரசாங்கத்தின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி நாளை பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணை நாளைய தினத்திற்கு ( 29 ) ஒத்திவைக்கப்பட்டது.
Average Rating