யாழ் பொதுசன நூலக சிற்றுண்டிச்சாலையை தென்னிலங்கைச் சிங்கள வர்த்தகர்களுக்கு வழங்குமாறு மாநகர முதல்வர் நிர்ப்பந்தம்
யாழ் பொதுசன நூலகத்திலுள்ள சிற்றுண்டிச்சாலையை தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள வர்த்தகர்கள் நடத்துவற்கு வழங்குமாறு யாழ் மாநகர முதலவர் திருமதி யோகேஸ்வரி பற்குணம் பிரயோகித்து வருகின்ற நிர்ப்பந்தங்கள் பெரும் சர்ச்சைகளை கிளப்பி உள்ளது. யாழ்ப்பாண பொதுசன நூலகத்தில் அமைந்திருக்கும் அனைத்து வசதிகளையும் கொண்ட சிற்றுண்டி விடுதி தற்பொழுது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரால் கேள்வி கோரப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. குறித்த உணவு விடுதியினை இவர் நடத்தி வருகின்ற நிலையில் மாநகர முதலவர் திருமதி யோகேஸ்வரி பற்குணம் தென்னிலங்கையைச் சேர்ந்த சிலர் இந்த உணவு விடுதியை நடத்த ஆர்வம் கொண்டிருப்பதாகவும் அதனால் உடனடியாக இந்த உணவு விடுதியை விடுமாறும் நிர்ப்பந்தித்து வருகின்றார். வழமையான கேள்வி கோரல் நடைமுறை மூலம் பெற்றுக் கொண்ட இந்த விடுதியை இவ்வாறு தென்னலங்கை சிங்கள வர்த்தகர்களுக்கு விடுவிக்குமாறு கோரும் மாநகரின் நிர்ப்பந்தம் பெரும் சர்ச்சைகளை மாநகரப் பணியாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. யாழ் பொதுசன பணியாளர்களிடையேயும் இந்தச் சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே யாழ் நகரப் பகுதியில் தெருவோரத்தில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்ற சிங்கள வர்த்தகர்களில் கணிசமானவர்களுக்கு மாநகர முதல்வர் பின்னணியில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
லாபம் கருதி மாநகர முதல்வர் இத்தகைய நடவடிக்கைளில் ஈடுபடுவதாக யாழ்ப்பாண வணிகர்கழகம் தற்பொழுது பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளது. பல லட்சம் ரூபாய்களை செலவளித்து தம்மால் உருவாக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக அதே பொருட்களை தெருவோரங்களில் வைத்து விற்கும் சிங்களவர்கள வர்த்தகர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துச் செல்வதாகவும் அவர்களை வர்த்தக நிலையங்களை அகற்றுமாறு கோரினால் மாநகர முதல்வரின் அனுமதியை தாங்கள் பெற்றிருப்பதாகக் கூறி தம்மையே அச்சுறுத்துவதாகவும் தம்மை வெளிப்படுத்த விரும்பாத யாழ் வணிகர் கழக முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
Average Rating