அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும்?
அரசியல் சாசனத் திருத்தங்களக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப் பகிர்வு குறித்த அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் என ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பது குறித்து அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கும் இடையில் விரைவில் இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு இந்தியா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழுத்தம் கொடுக்கும் என இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு கிழக்கு மீள இணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.
எனினும், உச்ச அளவிலான அதிகாரப் பகிர்வினை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
அதிகாரப் பகிர்வு குறித்த முனைப்புக்களில் இலங்கை அரசாங்கம் காலம் தாழ்த்தினால் அதன் ஊடாக புலி ஆதரவு புலம்பெயர் சமூகம் நன்மை அடையும் எனவும், இந்தியா அதிருப்தி அடையக் கூடுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படக் கூடிய திட்டங்களில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக நீடித்து வரும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா அதிக அக்கறை காட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்டங்களின் போது ஆளும் கூட்டணி கட்சிகள் எவ்வித எதிர்ப்பினையும் வெளியிடாதென ஜனாதிபதி நம்பிக்கைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating