ஒரு மாத கால்பந்து திருவிழா ஜெர்மனியில் நாளை தொடக்கம்
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த உலக கோப்பை போட்டி 2002-ல் ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் நடந்தது.
இந்நிலையில் 18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. நாளை தொடங்கும் இந்த போட்டி அடுத்த மாதம் (ஜுலை) 9-ந் தேதி வரை ஒரு மாதகாலம் நடக்கிறது.
32 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியின் ஆட்டங்கள் 12 இடங்களில் நடக்கின்றன. மொத்தம் 64 ஆட்டங்கள் நடக்கின்றன.
32 அணிகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் ஆட்டங்களின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றான 2-வது சுற்றுக்கு தகுதி பெறும்.
இதன்மூலம் 2-வது சுற்றில் 16 அணிகள் ஆடும். இதில் 8 அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும். இதில் இருந்து 4 அணிகள் அரைஇறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். அரைஇறுதியில் வெற்றி வாகைசூடும் 2 அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதும்.
உலக கோப்பை போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) 16.00 மணிக்கு வீரர்களின் அணி வகுப்புடன் கோலாகலமாக நடக்கிறது. இந்த நிகழ்ச்சி பெர்லினில் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து அன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன.
இதன் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனி அணி, கோஸ்டாரிகாவை எதிர்த்து ஆடுகிறது. இந்த ஆட்டம் 18.00 மணிக்கு நடக்கிறது. 2-வது ஆட்டத்தில் போலந்து-ஈகுவடார் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் நள்ளிரவு 20.30 மணிக்கு தொடங்குகிறது.