பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற மத்திய அரசு நிபந்தனையுடன் அனுமதி
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத் தகவலை முதல்வர் கருணாநிதி இன்று சட்டப் பேரவையில் அறிவித்தார். தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று இந்த அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர் சென்னையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும்போது அரசியல் கட்சியினரோ அல்லது தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
தடை நீக்கம்:
முன்னதாக பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தபோது விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, பாரிவதி அம்மாள் கோரிக்கை விடுத்தால் அதை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கேட்கப்படும், அதன் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுமதிக்க தயார் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந் நிலையில் தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை பெற, மலேசியாவில் இருந்து திருச்சி வருவதற்கு, இந்தியத் தூதரகத்தின் மூலமாக ஏற்பாடு செய்து தருமாறு பார்வதி அம்மாள் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
இதை மத்திய அரசுக்கு அனுப்பிய கருணாநிதி, பார்வதி அம்மாள் தமிழகத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற சில நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியைத் தரலாம் என்றும் பரி்ந்துரைத்தார்.
இதையடுத்து மத்திய அரசு பார்வதி அம்மாள் மீதான தடையை நீக்கி, அவர் இந்தியா வந்து சிகிச்சை பெற அனுமதி அளித்துள்ளது.
இதற்காக அவருக்கு 6 மாத கால விசா வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
Average Rating