பிரிட்டனில் யாருக்கு ஆட்சி: பெரும் இழுபறி நீடிப்பு
பிரிட்டனில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.பிரிட்டனில் கடந்த 6ம் தேதி, 649 இடங்களுக்கான பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி, 306 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் தொழிலாளர் கட்சி, 251 இடங்களிலும், ஜனநாயக விடுதலை கட்சி, 52 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் இரண்டாம் உலக போருக்கு பின் பிரிட்டனில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. பிரதமர் கார்டன் பிரவுனும், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேவிட் கேமரூனும், ஜனநாயக விடுதலை கட்சித் தலைவர் நிக்லெக்குடன் கூட்டணி ஆட்சி நடத்துவது குறித்து பேசியுள்ளனர்.அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள கன்சர்வேடிவ் கட்சியும், ஜனநாயக விடுதலை கட்சியும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு தீவிர முயற்சி நடக்கிறது. முதல் சுற்று பேச்சில் சில விஷயங்கள் ஒத்து வராததால் இரண்டாவது சுற்று பேச்சு இன்று நடக்கிறது.முதல் சுற்று பேச்சுவார்த்தையில், கல்வி, சுற்றுச்சூழல்,பொருளாதார விஷயங்களில் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக்கொள்ளப்பட்டது. இன்னும் சில விஷயங்களில் உடன்பாடு ஏற்படாததால் இன்று நடக்கும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என தெரிகிறது.
Average Rating