யாழ் மாநகர சபையின் துணைமுதல்வரும் ஈபிடிபியின் முக்கியஸ்தருமான றேகன் என்றழைக்கப்படும் இளங்கோ கைது
சாவகச்சேரி நீதவான் கே பிரபாகரனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் யாழ் மாநகர சபையின் துணைமுதல்வரும் ஈபிடிபியின் முக்கியஸ்தருமான றேகன் என்றழைக்கப்படும் இளங்கோவும் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நீதவான் ஏ. ஆனந்தராஜாவினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை அடுத்து கைது செய்யப்பட்ட றேகன் இன்று யாழ்ப்பாண நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இவரை எதிர்வரும் 24ம் திகதி வரை யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கான உத்தரவினை யாழ்ப்பாண நீதவான் ஏ. ஆனந்தராஜா பிறப்பித்துள்ளார். சாவகச்சேரி நீதவானுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே சார்ள்ஸ் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைகள் சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதனை அடுத்து யாழ்ப்பாண நீதவான் ஏ. ஆனந்தராஜா விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார். இதனை அடுத்து மற்றைய சந்தேக நபரைக் கைது செய்ய நீதிமன்றம் விடுத்த உத்தரவினை அடுத்து இன்றைய தினம் யாழ் மாநகரசபையின் துணைமுதல்வரான றேகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே யாழ் மாநகரசபையின் துணைமுதல்வர் றேகன் கைது செய்யப்பட்டுள்ளமையைக் கண்டித்து நாளைய தினம் தாம் பகிஸ்கரிப்பில் ஈடுபடப் போவதாக யாழ் மாநகர முதல்வர் அறிவித்திருக்கின்றார். இது தொடர்பாக உள்ளுர் ஊடகங்களுக்கு அவர் விளம்பரங்களையும் அனுப்பி வைத்திருக்கின்றார்.
Average Rating