ஐரோப்பாவில் புலிகள் இயக்கப் பிரதிநிதிகளால் வைப்பிலிடப்பட்டிருக்கும் பெருந்தொகையான பணம் வங்கிகளால் முடக்கப்படும் சாத்தியம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பாக ஒன்றியத்தால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் புலிகள் இயக்கம் மீதான தடை அறிவிப்புகள் ஐரோப்பிய நாடுகளிலுள்ள வங்கிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளால் அனுப்பப்பட்டுள்ளதால் அந்த வங்கிகளில் புலிகள் இயக்கப் பிரதிநிதிகளால் வைப்பிலிடப்பட்டிருக்கும் பெருந்தொகையான பணம் வங்கிகளால் முடக்கப்படக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விடுதலைப்புலிகள் அமைப்புக்குரிய பெருந்தொகைப் பணம் பிரான்ஸிலுள்ள மூன்று பிரபல வங்கிகளிலும் மற்றும் ஆயுதக் கொள்வனவுகளுக்காகப் பயன்படுத்தப்படும் பணக் கொடுப்பனவுக் கணக்குகள் ஜேர்மனியிலுள்ள பிராங்பேர்ட் வங்கியிலும் சுவிற்சர்லாந்திலுள்ள நான்கு பிரபல வங்கிகளிலும் இடப்பட்டுள்ளதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது சுவிற்சர்லாந்திலுள்ள விடுதலைப்புலிகள் அமைப்புப் பிரிவுகளின் செயற்பாட்டாளர்களாக இயங்கி வந்த அன்ரன் பொன்ராஜா மற்றும் குலம் எனும் செல்லையா குலேந்திரன் ஆகிய இருவரும் தமது பொறுப்புகளை சுவிற்சர்லாந்து தமிழர் அமைப்பின் தலைவராகிய காசிலிங்கம் சிவப்பிரகாசத்திடம் தற்காலிகமாக ஒப்படைத்து விட்டதாகவும் சுவிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.