தாய்லாந்தில் போராட்டத்தின் போது வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்..!
தாய்லாந்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது மூன்று வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒருவர் நெஞ்சில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் மரணமடைந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. டச்சு நாட்டு ஊடகவியலாளர் தோளில் துப்பாக்கிச் சூடு பட்ட நிலையிலும் மற்றுமொரு ஊடகவியலாளர் காலில் துப்பாகிச்சூடு பட்ட நிலையிலும் வைத்தியசாலை சென்றதாக ஏபி செய்தியாளர் தெரிவிக்கின்றார். துப்பாக்கியால் சுடப்பட்ட மூவரையும் தான் வைத்தியசாலை சென்று பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார். தாய்லாந்தில் பிரதமர் அபிசித் தலைமையிலான அரசு பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் பாங்காக்கில் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. இந்த கலவரத்தை அடக்க இராணுவம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இராணுவத்துக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் ஏற்பட்ட மோதலில் 38 பேர் பலியாகியுள்ளனர். எனவே, இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும்படி தாய்லாந்து அரசை ஐ.நா.சபை வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே போராட்டத்தை கைவிடும் படி 60 எம்.பி.க்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு வரும்படியும் அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த அழைப்பை போராட்டக்குழு தலைவர் நட்டாவுட் சைகுவார் ஏற்றுக் கொண்டார். இதில் பங்கேற்க எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது என்றும் தெரிவித்தார். ஆனால், போராட்டத்தைக் கைவிட்டால்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் சகித் வங்னோடெக்கி அறிவித்தார். இதற்குப் போராட்டக்காரர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
எனவே போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. போராட்டக்காரர்கள் பாங்கொக் நகரில் தொடர்ந்து குவிகின்றனர். ஆங்காங்கே கூடாரங்களை அமைத்து வருகின்றனர். இதனால் அங்கு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. நவீன தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளையும் குவித்து வைத்துள்ளனர். இதற்கிடையே இன்று காலை போராட்டக்காரர்களுக்கும், இராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 4 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் மூவரே வெளிநாட்டு ஊடகவியலாலர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இருந்தும் கலவரம் ஓய்ந்த பாடில்லை. சுமார் 3 ஆயிரம் பேர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாங்கொக்கில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
Average Rating