இலங்கை செல்ல நடிகர், நடிகைகளுக்கு தடை போடக்கூடாது – தென்னிந்திய நடிகர் சங்கம்..!

Read Time:5 Minute, 36 Second

கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியப் பட விழாவுக்கு இந்தியாவைச் சேர்ந்த எந்த நடிகர், நடிகையும் போகக் கூடாது என திரையுலகினர் கூடி போட்ட தீர்மானத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒப்புக் கொண்டு யாரும் போகக் கூடாது என கேட்டுக் கொண்டிருந்தது.
அப்படிப் போன நடிகர் நடிகையர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேசப்பட்டது. நடிகை ஆசின் இலங்கை போனதை கடுமையாக கண்டித்திருந்த நடிகர் சங்க செயலாளர் ராதாரவியும், அசின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று நடிகர் சங்கம் அப்படியே நேர் மாறான ஒரு முடிவை எடுத்துள்ளது.
நடிகர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் இன்று நடிகர் சங்க வளாகத்தில் உள்ள சுவாமி சங்கரதாஸ் அரங்கத்தில் கூடியது. காலை 10 மணிக்குத் தொடங்கியது. சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் கூடியது. கூட்டத்தில் செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர்கள் விஜயகுமார், மனோரமா, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். செயற்குழு உறுப்பினர்கள் சத்யராஜ், சூர்யா, முரளி, சார்லி, எஸ்.வி.சேகர், கே.ராஜன், சத்யப்ரியா, குயிலி, இணை செயலாளர்கள் கே.ஆர்.செல்வராஜ், அலெக்ஸ், கே.என்.காளை உள்பட ஏராளமான நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தின் முடிவில், இலங்கை செல்ல நடிகர், நடிகைகளுக்கு தடை போடக்கூடாது. தொழில் ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ நடிகர், நடிகைகள் செல்வதை இனி யாரும் தடுக்க கூடாது. இலங்கை செல்வதை தடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈழத் தமிழர் படுகொலை புரிந்தோரை சர்வதேச நீதிமன்றம் மூலம் தண்டிக்க வேண்டும் என இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதேபோல, சினிமா லாப-நஷ்டங்களுக்கு நடிகர்களிடம் நஷ்ட ஈடு கேட்கக் கூடாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.கொழும்புப் பட விழாவுக்கு எந்த தமிழ் நடிகர், நடிகையும் போகாமல் கடும் சிரத்தையுடன் பார்த்துக் கொண்ட நடிகர் சங்கம் தற்போது யார் போனாலும் அதைத் தடுக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்கத்தின் இன்றைய தீர்மானத்தைப் பார்க்கும்போது இலங்கை போனதற்காக பல்வேறு தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நடிகை அசின் மீது எந்தவித தூசியோ, துரும்போ படாத வகையில் அவர் பத்திரமாக நடிகர் சங்கத்தால் பாதுகாக்கப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.கொழும்பு பட விழாவுக்குப் போகக் கூடாது என்று கடுமையாக நிர்ப்பந்திக்கப்பட்ட பாலிவுட் திரையுலகினர் தற்போதைய நடிகர் சங்க தீர்மானத்தில் பெரும் கோமாளிகளாக்கப்பட்டுள்ளனர்.அமிதாப் பச்சன் முதல் சிறிய நடிகர், நடிகர் வரை பலரும் இந்த விழாவுக்குப் போகாமல் புறக்கணித்தனர். தமிழ் உணர்வாளர்களின் போராட்டம் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், தமிழ் திரையுலகின் ஒட்டுமொத்த கோரிக்கைக்கு மதிப்பு கொடுத்துதான் அமிதாப் உள்ளிட்டோர் போகாமல் இருந்தனர்.ஆனால் இப்போது நடிகர், நடிகையர் யாரும் இலங்கைக்குப் போவதை தடுக்கக் கூடாது என்று நடிகர் சங்கம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற தீர்மானத்தையோ, அறிவிப்பையோ, கொழும்புப் பட விழா பிரச்சினையின்போது ஏன் நடிகர் சங்கம் நிறைவேற்றவில்லை என்பதும் புரியவில்லை. இலங்கைக்கு எதிராக இயக்குநரும், நாம் தமிழர் அமைப்பின் தலைவருமான சீமான் கடுமையாக போராட்டம் நடத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் சங்கத்தின் இந்த நடவடிக்கை கவனிப்புக்குரியதாகியுள்ளது. மேலும், நடிகர் கருணாஸ், நாம் தமிழர் அமைப்புக்கு எதிராக புகார் கூறியுள்ள நிலையில், தற்போதைய நடிகர் சங்க முடிவு, முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆளும் கட்சியில் இணையப்போவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை-விஜயகலா மகேஸ்வரன் எம்.பி…!
Next post தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைத் துப்பாக்கியுடன் கைது..!