புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பான சட்டங்களை வலுப்படுத்துவதற்கு கனடா தயங்காது – ஸ்டீவன் ஹார்பர்..!
புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான சட்டங்களை வலுப்படுத்துவதற்கு கனடாவின் பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல் கப்பல்களின் மூலம் அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் கனடாவில் அடைக்கலம் கோர முற்பட்டால் சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கனடா புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நேசக்கரம் நீட்டும் நாடு என்ற போதிலும், சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டின் இறைமையையும், தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது முதன்மைக் கடமைகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் கப்பல் மூலம் கனடாவில் தஞ்சம் கோரியதன் பின்னர் முதல் தடவையாக அந்நாட்டு பிரதமர், புகலிடக் கோரிக்கையாளர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். குறித்த கப்பலில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருக்கக் கூடும் என்பது தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் அதிகம் கரிசனை கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. திட்டமிட்ட குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்த அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கப்பலில் பயணித்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டத்தரணிகளின் ஊடாக தங்களது ஆள் அடையாளங்களை உறுதிப்படுத்தி அடைக்கலம் கோரும் பணிகளில் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கனேடிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating