ஐக்கிய நாடுகளின் சேவை இலங்கைக்கு மிகவும் தேவை – அமைச்சர் பெசில் ராஜபக்ஷ..!
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சேவை இலங்கைக்கு மிகவும் அவசியமானதென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சில விடயங்களில் முறுகல் நிலை காணப்பட்டாலும் உலக அமைப்பு என்ற ரீதியில் இணைந்து செயற்படுவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து செயலாற்ற வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலக மனிதாபிமான தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் மனிதாபிமான தொண்டர்களின் உதவியின்றி இலங்கை இந்த நிலைமையை எட்டியிருக்க முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை மக்களின் சார்பிலும், அரசாங்கத்தின் சார்பிலும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு குடும்பம்; மற்றும் நன்கொடையாளர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்காலிக இடம்பெயர் முகாம்கள் அமைப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் விவாதம் நடைபெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Average Rating