காமா சோமா போன்ற படங்களில் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை – பத்மப்ரியா
தமிழ் சினிமாவில் புதிதாகக் களமிறங்கி வெற்றிப் பெற்ற நாயகிகள் நிறைய பேர் இருந்தாலும், மிகைப்படுத்தாத சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த எண்ணிக்கையில் முதலிடத்தில் இருப்பவர் பத்மப்ரியா. பட வாய்ப்புக் கிடைக்கிறதே என்பதற்காக எல்லாப் படங்களிலும் அவர் நடிப்பதில்லை. தேர்ந்தெடுத்தப் படங்களிலேயே நடிக்கிறார். இதுவரை முப்பதிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அவர் காலடி வைத்த மொழிகளிலெல்லாம் சிறந்த நடிகை என்கிற பெயரும் அவருக்கு உண்டு. அவரிடம் தேர்ந்தெடுத்து படங்கள் செய்வது குறித்துக் கேட்டபோது, “”காமா சோமா போன்ற படங்களில் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. நல்ல கதையம்சத்துடனும், கதாபாத்திரங்களுடனும் இருக்கும் படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். “பழசிராஜா’, “இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ போன்ற படங்களில் நடித்தது மனதிற்கு நிறைவாக இருந்தது. இப்படிப்பட்ட படங்களில் நடிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்றார். தற்போது, பத்மப்ரியாவிற்கு காதல் மோகம் வந்திருக்கிறதாம். அதாவது காதல் சம்பந்தமான திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற மோகம். “”உருகி, உருகி காதலிக்க வேண்டும். நீதான் என் உயிர் என்று காதலனின் காலில் விழுந்து கிடக்கும் காதலியாக நடிக்க வேண்டும். மரங்களைச் சுற்றி வந்து, ஆடிப் பாட வேண்டும். இப்படிப்பட்ட பாத்திரங்களில் நடிப்பதுதான் என்னுடைய ஆசையாக இருக்கிறது” என்று கூறி வெட்கப் புன்னகைக் காட்டுகிறார். “”கிளாமர் போட்டியை சந்திக்கத் தயாரா?” என்று கேட்டால், “”என்னுடைய உடல்வாகுக்குக் கிளாமரெல்லாம் சரிப்பட்டு வராது ஸôர். இதனாலேயே எனக்குப் பல பட வாய்ப்புகள் பறிபோயுள்ளன. அது குறித்து நானும் கவலைப்படவில்லை. அதே சமயம், கிளாமருக்கு நான் எதிரியும் கிடையாது” என்கிறார் சிரித்துக்கொண்டே!
Average Rating