எனக்கு அரசியல் வேண்டாம்- நடிகர் கமலஹாசன்..!
கேரளாவின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான திருவோணம் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையை யொட்டி, கேரள அரசு சார்பில் ஆண்டுதோறும் விழா நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி இந்த ஆண்டின் ஓணம் விழா நேற்று மாலை தொடங்கியது. விழா வருகிற 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த ஓணம் விழாவின் மாநில அளவிலான தொடக்க விழா திருவனந்தபுரம் சந்திரசேகரன் நாயர் ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்தது. இவ்விழாவில், திரையுலக வாழ்க்கையில் 50 ஆண்டுகள் நிறைவடைந்த பிரபல நடிகர் கமலஹாசனுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.விழாவுக்கு கேரள உள்துறை மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி கோடியேரி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் விழாவை தொடங்கிவைத்து, நடிகர் கமலஹாசனுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப்பரிசு வழங்கி, பாராட்டி பேசினார். பாராட்டை பெற்றுக் கொண்டபின், நடிகர் கமலஹாசன் ஏற்புரை ஆற்றினார். அப்போது அவர்,
ஒரு தாயும் தந்தையும் ஒரு மகனிடம் காட்டும் அன்பை இன்று உங்கள் அனைவரிடமும் காண்கிறேன். நான் சினிமாத் துறையில் கேரளாவில் நுழைந்தபோது எனக்கு ரசிகர்கள் குறைவு. இன்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருப்பதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
மலையாள சினிமாவில் ஒரு கலைஞனாக பிறந்தேன். தமிழ்நாட்டில் என்னை இயக்குனர் கே.பாலச்சந்தர் ஒரு கலைஞனாக தத்தெடுத்துக் கொண்டார். எனக்கு பாராட்டு விழா நடத்துவதில் பலருக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் 30 வயதுக்கு உட்பட்ட எனது அன்பான ரசிகர்களிடம் அந்த கருத்துவேறுபாடு இருக்காது என நினைக்கிறேன்.
தமிழ்நாட்டில் பல கலைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். நான் ஜனங்களுடைய கலைஞனாகவே தொடர விரும்புகிறேன். இந்த விழா ஒரு தனிமனிதனுக்கு எடுக்கப்பட்ட விழா அல்ல. கலைக்கு எடுக்கப்பட்ட விழா. நாளைய தினம் எனது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்களது கண்களை தானமாக எழுதி வைக்க இருக்கிறார்கள். அதற்கு உறுதுணையாக இருந்த கேரள அரசுக்கும், இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்த கேரள சுற்றுலாத்துறைக்கும் மற்றும் அனைவருக்கும், எனது ரசிகப் பெருமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Average Rating