மிக்_29 போர் விமானம் நொறுங்கி விழுந்தது: விமானிகள் உயிர் தப்பினர்
குஜராத் மாநிலத்தில் ஜாம் நகர் என்ற இடத்திற்கு அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்_29 ரக போர் விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த 2 விமானிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள இந்திய விமான படைக்கு சொந்தமான விமான படைத்தளத்திலிருந்து நேற்று காலை மிக்_29 ரக போர்விமானம் ஒன்றை பயிற்சிக்காக பயிற்சி விமானிகள் இருவர் ஓட்டிச்சென்றனர். ஜாம் நகருக்கு அருகே வானத்தில் பறந்து கொண்டிருந்த போது அந்த விமானம் திடீர் என்று கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானம் சேதம் அடைந்தது. என்றாலும் கூட விமானத்தில் பயணம் செய்த இரு விமானிகளும் அதிர்ஷ்டவசமாக கீழே குதித்து உயிர் தப்பினர். அவர்கள் இருவரும் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜாம்நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள் ஆள் இல்லாத தீவு பகுதி ஒன்றில் இந்த விமானம் விழுந்து நொறுங்கியது. சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் சம்பவம் நடந்த இடத்திற்கு விமானப்படையினரும், போலீசாரும், கப்பல் படையினரும் விரைந்து சென்று விமானிகளை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விமானப்படை அதிகாரிகள் கூறினர். மிக் போர் விமானங்கள் ஏற்கனவே பல முறை விபத்துக்குள்லாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த விமான விபத்தில் படுகாயம் அடைந்து உயிர் தப்பிய விமானிகளின் பெயர் விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.