ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்..!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதான தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளனர். கட்சித் தலைமைத்துவம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை நிலைமைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சித் தலைவரை தெரிவு செய்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும், மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் வாக்களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் பாராளுமனற உறுப்பினர்கள் அமைப்பின் தலைவர் மஹேந்திர விஜேரட்ன தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்தக் கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில காலமாக ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு பின்னடைவுகளை எதிர்நோக்கி வருவதாகவும் கூடிய விரைவில் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating