புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதற்காக மேலும் இரண்டு முகாம்கள் நிர்மாணிக்கப்படும்-அவுஸ்திரேலியா..!
புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதற்காக மேலும் இரண்டு முகாம்கள் நிர்மாணிக்கப்பட உள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அதிகளவிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. சிறுவர்கள் மற்றும் குடும்பங்கள் தடுப்பு முகாம்களிலிருந்து, ஓரளவு வசதியான வேறும் இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுவர்களை முள் வேலிகளை அடைத்து வைத்திருப்பதில் தமக்கு உடன்பாடில்லை என அவுஸ்திரேலியாவின் புதிய ஜனாதிபதி ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். அடிலெய்ட் மற்றும் பேர்த் ஆகிய பிரதேசங்களில் இரண்டு புதிய தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் சுமார் இரண்டாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்க வைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் புகலிடக் கொள்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு அண்மையில் விமர்சனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தடுப்பு முகாம்களில் சிறுவர்களை தடுத்து வைப்பதன் மூலம் பாதகமான விளைவுகள் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுவர்களின் உளநிலை பாதிக்கப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, புகலிடம் வழங்குவது தொடர்பில் கடுமையான விதிகள் பின்பற்றப்படும் அதேவேளை, புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சில சலுகைகளை வழங்கவும் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவுன் தெரிவித்துள்ளார்.
Average Rating