் புலிகளின் நிர்வாகப் பகுதியில் கிளைமோர்த் தாக்குதல்: குடும்பஸ்தர் படுகாயம்
வவுனியா மாவட்டம் புதூர் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் கிளைமோர்த் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் இருந்து 50 கிலோமீற்றர் தூரத்தில் இன்று சனிக்கிழமை காலை 6.20 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புதூர்ப் பகுதியைச் சேர்ந்த நவரட்ணம் சிறீநாகராசன் (வயது 32) என்பவரே படுகாயம் அடைந்தவர் ஆவார்.
தனது வயல் காணியில் காவல் கடமையினை முடித்து விட்டு உந்துருளியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே அவர்மீது கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் நேற்று மாலை கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் புதுக்குடியிருப்பில் இருந்து நான்கு கிலோமீற்றர் தொலைவில் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் இருந்து வாகனம் ஒன்று சிறிய இடைவெளியில் தப்பியுள்ளது.