ஜோர்தானில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் தமது எஜமானியை படுகொலை செய்துள்ளார்..!
Read Time:2 Minute, 28 Second
ஜோர்தானின் பெட்ரா நகரில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் தமது எஜமானியை படுகொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹொரணைப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான யுவதி ஒருவரே தமது வீட்டுப் எஜமானியை படுகொலை செய்துள்ளார். கடுமையாக தாக்கிப் படுகொலை செய்ததுடன் சடலத்தை தீயிட்டு கொளுத்த குறித்த இலங்கை வீட்டுப் பணிப் பெண் முயற்சித்துள்ளார். இந்தப் படுகொலைச் சம்பவத்தை மேற்கொண்ட இலங்கை யுவதியை ஜோர்தானிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள பெண்ணைச் சந்திக்க அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் சென்றதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி முகாமையாளர் எல்.கே.ருஹூனகே தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண் இந்த வருட ஆரம்பத்தில் ஜோர்தானுக்குச் சென்றுள்ளார். இவர் பணியாற்றிய வீட்டின் எஜமானி இந்தப் பெண்ணைத் தாக்கி சித்திரவதை செய்துவந்ததாகவும் அவர் தூதரக அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அத்துடன் இலங்கையிலுள்ள தனது குடும்பத்தினரிடமிருந்து கிடைக்கும் கடிதங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைத் தனக்கு வழங்குவதில்லை எனவும் நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் கைதுசெய்யப்பட்ட பெண் தெரிவித்ததாக ருஹூனகே தெரிவித்துள்ளார். தன்னைத் தாக்கியபோது தப்பிப்பதற்காக எஜமானியின் கழுத்தை நெரித்ததாகவும் அந்தப் பெண் கூறியதாக ருஹூனகே கூறியுள்ளார். மனிதப் படுகொலைக் குற்றச் செயல் என்பதனால் அநேகமாக குறித்த இலங்கைப் பணிப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் குறிப்பிடப்படுகிறது.
Average Rating