கனடா, சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது..!
Read Time:3 Minute, 57 Second
கனடா, சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் மற்றும் ஆட்கடத்தல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் கனாடாவின் மனிதநேய கொள்கைகளை துஸ்பிரயோகம் செய்வதாகவும், இதனால் கடுமையான சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தியதாகவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. குடிவரவு தொடர்பாக கனடா பின்பற்றி வரும் நெகிழ்வுத் தன்மையை சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என அந்நாட்டு பொதுப்பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் தெரிவித்துள்ளார். குடிவரவுச் சட்டங்களை மீறுவதற்கு எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது எனவும், சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் கனடாவிற்குள் குடியேறும் நபர்களை தடுத்து வைப்பது கட்டாயமாக்கப்படும் எனவும், ஒரு வருட காலம் வரையில் தடுத்து வைத்து விசாரணை நடத்தக் கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சட்டவிரோத குடியேற்றக்காராகள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் நிரந்தர குடியுரிமையைக் கோரி விண்ணப்பிக்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பாதுகாப்பு தேவையில்லை என தென்பட்டாலோ அல்லது விடுமுறைக்காக சொந்த நாட்டுக்கு சென்றும் திரும்பும் புகலிடக் கோரிக்கையாளர்களின் புகலிட அந்தஸ்து ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல்களுக்குப் பயன்படுத்தப்படும் கப்பல் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத ஆட்கடத்தல்காரர்கள் கனடாவை இலக்கு வைத்து பயணங்களை மேற்கொள்வதாக கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உச்சளவு சலுகைகளையும் பாதுகாப்பையும் வழங்கும் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கனடா முன்னணி வகித்து வருவதாகவும், சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களினால் இந்த நிலைமைக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 34 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட கனடா சுமார் 250,000 பேருக்கு வருடாந்தம் புகலிடம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating