வடக்கில் தமிழ் மக்களினால் புதைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டு நீதிமன்றத்தினூடாக உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது‐ஜெனரல் உபய மெதவல..!
Read Time:2 Minute, 6 Second
வடக்கில் தமிழ் மக்களினால் புதைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணத் தொகை காவற்துறையினரால் மீட்கப்பட்டு, நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டு, பின்னர், அவை உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார். தாம் தங்க ஆபரணங்களை புதைத்து வைத்துள்ளதாக மக்கள் காவற்துறையினருக்கு அறிவித்ததையடுத்து, அவர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆபரணங்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளர். அதேவேளை 58வது படைப் பிரிவினர் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்தே 100 கிலோ கிராம் தங்க ஆபரணங்களை மீட்கப்பட்டதாகவும் அவை அரசுடமையாக்கப்பட்டு, இலங்கை மத்திய வங்கியில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார். எது எப்படி இருந்த போதிலும் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, தமது உடமைகளை கைவிட்டு, இடம்பெயர்ந்த மக்கள் தம்வசம், தங்க ஆபரணங்களையும் ஒரு சில உடமைகளையும் கொண்டு சென்றனர். போர் உக்கிரமடைந்த நிலையில், மக்கள் தாம் கொண்டு சென்ற தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை இருந்த இடங்களில் புதைத்து விட்டு, அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு சென்றனர். இவ்வாறு மக்களால் புதைக்கப்பட்ட பல மில்லியன் பெறுமதியான தங்க ஆபரணங்கள் படையினரால் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது. அதில் ஒரு தொகுதியான 105 கிலோ கிராம் தங்க ஆபரணங்களே அரசுடமையாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating