ஜனாதிபதியின் பதிலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்திருக்கின்றது..!
பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி பதிலுக்காக காத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாகவும், இந்த விஜயத்திற்கு முன்னர் சந்திப்பொன்றை நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தை தொடர்பில் செப்டம்பர் மாதம் 27ம் திகதி ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகம் கடந்த 29ம் திகதி அதற்கான பதில் கடிதத்தை அனுப்பி வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் இடம்பெயர் மக்கள் விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த வாரத்தில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating