மன்னார் மாவட்டத்தில் சிங்கள குடும்பங்கள் மீள் குடியேறுவதற்கு காணிகள் வழங்கப்படவில்லை என முறைப்பாடு..!
Read Time:2 Minute, 14 Second
மன்னார் மாவட்டத்தில் சிங்கள குடும்பங்கள் மீள் குடியேறுவதற்கு காணிகள் வழங்கப்படவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தின் முருங்கன் பிரதேசத்திற்கு சென்றுள்ள சிங்கள குடும்பங்களுக்கு இதுவரையில் மீள் குடியேறுவதற்கு உசிதமான காணிகள் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால் குறித்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்திற்கு முன்னர் குறித்த பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்கள் தற்போது நண்பர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாக இடம்பெயர்ந்து வாழும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக சுமார் 25 குடும்பங்கள் அனுராதபுரத்திற்கு இடம்பெயர்ந்ததாக குணபால என்ற நபர் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலையினால் சொந்த இடங்களில் மீள் குடியேறுவதற்கு தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவிடம் தமது நிலைமைகளை விளக்கியதாகவும், உரிய அதிகாரிகள் தமக்கு காணிகளை வழங்குவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். இடம்பெயர் சிங்கள குடும்பங்களினது உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதனால் அதிகளவு காணிகள் மீள் குடியேறுவதற்கு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Average Rating