2030-க்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்-நாசா..!
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக ஏற்கனவே பல கண்டுபிடிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே அங்கு மனிதர்கள் வசிக்க முடியும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை நிரந்தரமாக குடியமர்த்த அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா திட்டமிட்டுள்ளது. சந்திரன் உள்ளிட்ட மற்ற கிரகங்களிலும் மனிதர்களை குடியமர்த்துவது பற்றி நடத்தி வரும் ஆய்வின் ஒரு பகுதியாக, இந்த ஆய்வையும் நாசா நடத்தி வருகிறது. கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் முக்கிய ஆராய்ச்சி மையங்களில் ஒன்றான அமிஸ் ஆராய்ச்சி மையம் இந்த ஆய்வை நடத்தி வருகிறது. இது, ரூ.5 ஆயிரத்து 600 கோடி செலவு பிடிக்கும் திட்டம் ஆகும். 2030-ம் ஆண்டுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியமர்த்த நாசா திட்டமிட்டுள்ளது. இந்த திட்ட ஆய்வுக்காக, நாசா விஞ்ஞானிகளுக்கு ரூ.41/2 கோடி அரசு மானியம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக கோடீசுவரர்களிடம், நிதி உதவி அளிக்குமாறு நாசா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த திட்டப்படி, செவ்வாய் கிரகத்தில் வசிக்க தேவையான பொருட்கள் மற்றும் உபகரணங்களுடன் விண்வெளி வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்களை அனுப்புவதற்கே, ரூ.5 ஆயிரத்து 600 கோடி செலவாகும் என்பதால், அவர்களை மீண்டும் பூமிக்கு வரவழைக்கும் திட்டம் இல்லை. எனவே, அவர்கள் செவ்வாய் கிரகத்திலேயே நிரந்தரமாக குடியிருக்க வேண்டி இருக்கும். இத்திட்டப்படி, 4 விண்வெளி வீரர்கள் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating