‘லப்… டப்…’ டென்ஷன்..!
பல பேருக்கு இதயக்கோளாறு என்றாலே, மாரடைப்பு என்று தான் தெரியும். கொலஸ்ட்ரால் காரணமாக இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதன் மூலம் இது ஏற்படுகிறது என்று மட்டும் தான் தெரியும். ஆனால், இதயக்கோளாறுகள் பல வகையில் நேருகின்றன. குறிப்பாக, இதயத்துக்கு ரத்தம் செலுத்தும் முறையில் கோளாறு ஏற்பட்டால் திடீர் விபரீதம் ஏற்பட வாய்ப்பு அதிகம். இதயத்துடிப்பு குறைவாகவோ, அதிகமாகவோ அடித்தால் என்ன தெரியப்போகிறது? ஆனால், அதில் தான் ஆபத்தே உள்ளது. இதயத்துக்கு ரத்தம் செலுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டால், நுரையீரல் மற்றும் மற்ற திசுக்களுக்கு ரத்தம் செல்வது பாதிக்கப்படுகிறது. அதனால், இதயத்தின் செயலிழப்பு நேர்கிறது. சமீபத்தில் சென்னை, மும்பை உட்பட ஒன்பது நகரங்களில் எடுத்த சர்வேயில் தெரியவந்துள்ள தகவல்கள் வேதனையானவை.
* இதய பாதிப்பு என்றாலே, மாரடைப்பு என்று தான் பலரும் நினைக்கின்றனர். கொலஸ்ட்ரால் மூலம் ஏற்படும் பாதிப்பு என்ற அளவில் தான் தெரிந்துள்ளது.
* இதய செயலிழப்பு தொடர்பான கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவில் இல்லை.
* இதய சிகிச்சை பெறவோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவோ நகரங்களில் உள்ள, படித்தவர்கள் கூட ஆர்வம் காட்டுவதில்லை.
* பெரும்பாலோர் மருத் துவ காப்பீடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவதில்லை. இதனால், இதய சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை வெறும் 11 சதவீதமாக உள்ளது.
* இதய வால்வுகள் செயலிழந்து ரத்தம் செலுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டவுடன் டாக்டரிடம் போவோர் எண்ணிக்கை குறைவு. இதய பம்ப் பாதி அளவில் மட்டும் வேலை செய்யும் போது தான் டாக்டரிடமே போகின்றனர்.
* இப்படி முற்றிய நிலையில் போவதால், செலவுக்கு பயப்பட வேண்டியிருக்கிறது.
* இதயம் செயலிழப்பு என்பது தான் மோசமானது; இது பற்றிய விழிப்புணர்வு இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.
“நாற்பது வயதை தாண்டியவர்களுக்கு ஏதாவது ஒரு காரணத்தால், இதய வால்வு பிரச்னை எழும். அதனால், நாற்பதை தாண்டியவுடனே, முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அப்போது தான் முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்’ என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நகரங்களில் உள்ளவர்களுக்கு மருத்துவ காப்பீடு என்பது பற்றிய பெரிய அளவில் விழிப்புணர்வு இன்னும் ஏற்படாததும் அவர்கள், நோய் வந்தால் பரிதவிப்பதற்கு காரணம். மருத்துவகாப்பீடு என்பது, மிகவும் அவசியமானது. கண்டிப்பாக ஒவ்வொருவரும் குடும்பம் முழுவதுமே காப்பீடு செய்து கொள்வது நல்லது. நீங்கள் இதுவரை காப்பீடு எடுக்கவில்லை என்றால் உடனே செய்யுங்கள். உடல் நிலை பாதிக்கப்பட வேண்டாம்; ஆனால், வந்து விட்டால்…? காப்பீட்டு “ஸ்மார்ட் கார்டை’ காட்டினால் போதும்; மருத்துவமனையில் அனுமதித்துக்கொண்டு எல்லா சிகிச்சையையும் பெற்று வீடு திரும்பிவிடலாமே.
Average Rating