அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் சொகுசு வாழ்க்கை அனுபவிக்கின்றனர்–சஜித்..!
அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வரும் அதேவேளை, பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாடுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பலாங்கொடை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அநேகமான மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் வெளிநாடுகள் வழங்கிய உதவிகள் மக்களுக்கு சென்று சேரவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு 15000 ரூபா மட்டுமே நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் அரசாங்க ஆதரவாளர்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தெல்வத்த பிரதேசத்தில் 2005ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவினால் சுனாமி அருங்காட்சியகமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், இந்த அந்தக் கட்டடத்தின் பணிகள் அடிக்கல் நாட்டலுடன் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுதந்திரமாக அரசியல் கூட்டமொன்றை நடத்துவது மட்டும் மனித உரிமையாக கருதப்பட முடியாது எனவும், பட்டினியின்றி வாழ்வதற்கான பின்னணியை ஏற்படுத்துதலும் முக்கிய மனித உரிமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அரசாங்கம் பிரச்சாரம் செய்து வருகின்ற போதிலும் மக்கள் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதில் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகத தெரிவித்துள்ளார்.
Average Rating