“எமக்கு குழிபறிக்க நினைத்தால், சம்பந்தனின் குருதி குடிப்போம்” புலி ஆதரவு ஊடகங்கள் எச்சரிக்கை!
“விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம் எனவும் அவர்களது நடவடிக்கைகளினாலேயே அவர்களுக்கு அழிவு ஏற்பட்டதாகவும் கூறிய இரா.சம்மந்தன் எமக்கு குழிபறிக்க நினைத்தால், அவரது குருதி குடித்து தொடர்வோம் எமது விடுதலைப் பயணத்தை” என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது, விடுதலைப் புலிகள் ஆதரவு இணையத்தளம்.
இலங்கையில் தமிழ் பகுதிகளில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிக எண்ணிக்கை உறுப்பினர்களை கொண்ட கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது இரா.சம்பந்தன் கூறிய விஷயங்களே, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரா.சம்பந்தன் தமது பேச்சில், “விடுதலைப் புலிகள் சிங்கள மக்களை மட்டும் கொலை செய்யவில்லை. விடுதலை புலிகளின் கொலை பட்டியலில் எனது பெயரும், எனது சகாக்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இன்று புலிகளை அழித்துவிட்டோம் என்று யார் யாரோ கூறிக்கொள்கின்றனர். புலிகளை எவரும் அழிக்கவில்லை. அவர்கள் தம்மைத் தாமே அழித்து கொண்டனர். ஜனநாயகத்தையும், தார்மீகத்தையும், மனித உரிமைகளையும் கடைப்பிடிக்கத் தவறியதாலேயே புலிகள் அழிந்து போனார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
அத்துடன் வெளிநாட்டு தமிழர்களையும் தமது பேச்சில் அவர் குறிப்பிட்டிருந்தார். “வெளிநாட்டில் உள்ள தமிழர்கள், உங்களை ‘புலம்பெயர்வாழ் சமூகம்’ என்று சொல்லிக்கொண்டு கூச்சல் போடுகின்றீர்கள். 1956-ம் ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட இன ஒழிப்பின்போது தம்மைப் பாதுகாத்து கொள்வதற்காக இந்த மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி விட்டனர். நாம் இன்னமும் இலங்கையிலேயே இருக்கிறோம்”
இந்தப் பேச்சையடுத்து, “விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், தமிழினத்தின் நன்மை கருதி மறைவிடத்தில் உள்ளபோது, அவரால் தலைவராக அங்கீகரிக்கப்பட்ட தலைவரான சம்பந்தன் இப்படி பேசுவது மன்னிக்க முடியாத குற்றம்” எனவும் கூறியுள்ள இணையத்தளம், “சம்பந்தனின் குருதி குடிப்போம்” என்ற பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘குருதி குடித்தல்’ எப்போது நடைபெறும் என்பதை அந்த இணையத்தளம் அறியத் தரவில்லை.
விடுதலைப்புலிகளின் மற்றொரு கிளை அமைப்பான ‘தமிழர் மனித உரிமைகள் பேரவை’, “புலிகள் பற்றி அவதூறு கூறிய சம்பந்தன் தலைவிதியை பிரபாகரன் நிர்ணயிப்பார். பிரபாகரன் வெளியே வந்ததும், சம்பந்தருக்கு உரிய தண்டனை வழங்கப்படும்” என்று ஏற்கனவே கூறியிருந்தது.
Average Rating