இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா முழு ஆதரவு தரும் : ராஜபக்சவிடம் பிக்ரம் சிங் உறுதி!
இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா முழு ஆதரவை வழங்கும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் பிக்ரம் சிங், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளார். ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிக்ரம் சிங் தலைமையிலான குழுவினர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடினர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்திய இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ரஜீவ் தெவாரி, கேணல் எஸ்.கே.ஆச்சர்யா, கேணல் எஸ்.சீ.தேவ்கன், கெப்டன் ரஜீவ் மெத்திவ்ஸ் மற்றும் இந்தியாவின் இலங்கைக்கான தூதுவர் அசோக் கே.காந்தா ஆகியோருடன் இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, ஜனாதிபயின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்து கொண்டனர்.
ராஜபக்சவை சந்தித்த போது பிக்ரம் சிங் மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்தினர் குறிப்பிடத்தக்க அனுபவம், அறிவு என்பவற்றை கொண்டிருப்பதாகவும், அவர்களது போட்டித்திறன், ஒழுக்கம், செயல்திறன் என்பன அபாரமானவை எனவும், இரு நாடுகளும் தமக்கிடையே இந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வது பயனுடையதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இலங்கையின் இறுதி யுத்த சூழ்நிலையில் இந்தியாவின் உதவிக்கு நன்றி கூறிய ராஜபக்ச, இந்தியாவின் உதவியில்லாது இருந்திருப்பின், தமக்கு சூழ்நிலை மேலும் கஷ்டமாகியிருக்கும் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவது குறித்து ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதில் அளித்த சிங், இச்சூழ்நிலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உறுதியான கோரிக்கை முன்வைத்திருப்பதாக கூறினார்.
Average Rating