விஸ்வரூபம் படத்தை தமிழகத்தில் திரையிட போகும் 390 ‘மர்ம’ தியேட்டர்கள் எவை?
“கமலின் விஸ்வரூபம் படத்தை தியேட்டர்களில் திரையிட மாட்டோம்” என திரையரங்க உரிமையாளர்கள் அமைப்பு ஒரு பக்கமாக அறிவித்து விட்டு இருக்க, மறுபக்கமாக கமல் தரப்பில் இருந்து கூலாக கூறப்படும் ஒரு தகவல், தியேட்டர் உரிமையாளர்கள் அமைப்பை அதிர வைத்துள்ளது. “இவர்கள் எதை வேண்டுமானாலும் அறிவித்து விட்டு போகட்டும். தமிழ்நாடு முழுவதும் விஸ்வரூபம் படத்தை திரையிட 390 தியேட்டர்கள் முன்வந்துள்ளன. படம் குறிப்பிட்ட தேதியில் திரைக்கு வரும்” என்பதே கமல் தரப்பு தகவல்.
390 தியேட்டர்களின் உரிமையாளர்கள் கமலின் விஸ்வரூபம் படத்தை திரையிட தயார் என்ற தகவல் காரணமாக மிரண்டு போயுள்ள தியேட்டர் உரிமையாளர்கள் அமைப்பு, அப்படிப்பட்ட தியேட்டர்கள் எவை எனக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக அவசர ஆலோசனைக் கூட்டத்தை வரும் ஜனவரி 3-ம் தேதி கூட்ட போவதாக கூறியுள்ளது.
இதற்கிடையே, தமிழகம் எங்குமுள்ள தியேட்டர்களில், இந்த 390 தியேட்டர்கள் எவையாக இருக்கலாம் என்று தகவல் சேகரிக்கும் பணியில் சிலரை இறக்கிவிட்டுள்ளது, தியேட்டர் உரிமையாளர்கள் அமைப்பு. சந்தேகத்துக்குரிய பட்டியலில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களை போனில் அழைத்து, ‘விஸ்வரூபம் படத்தை வெளியிடுகிறீர்களா?’ என்று விசாரிப்பதும் நடக்கிறது!
அத்துடன் ‘இலவச இணைப்பு’ மிரட்டலாக, “நீங்கள் விஸ்வரூபம் படத்தை திரையிட்டால், உங்கள் தியேட்டர்களில் வெளியாகும் இதர படங்களை மற்ற தியேட்டர்களில் திரையிட மாட்டோம். இதனால், வேறு யாரும் உங்களுக்கு படம் கொடுக்க மாட்டார்கள்” எனவும் தகவல் கூறப்படுகிறது.
இங்குள்ள மற்றொரு விஷயம், விஸ்வரூபம் படம் தொடர்பாக விளக்கம் கொடுக்க கமல் ஏற்பாடு செய்ததிருந்த செய்தியாளர் மாநாட்டில் கமலுடன், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி சேகரன், மற்றும் திருப்பூர் சுப்ரமணியமும் வந்திருந்தனர்.
ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம் மாவட்ட தியேட்டர் அதிபர்கள் அநேகர் திருப்பூர் சுப்ரமணியத்தின் பேச்சுக்கு கட்டுப்படக் கூடியவர்கள் என்று கூறப்படுகிறது.
Average Rating