உக்ரேனியர் ஒருவர் இலங்கையர்களுக்கு சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்களை விற்பனை
உக்ரேனிய பிரஜை ஒருவர் இலங்கையர்களுக்கு சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்களை விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உடல் உறுப்புக்களை சட்டவிரோதமான முறையில் வர்த்தகம் செய்ததாக உக்ரேனிய பிரஜை ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இலங்கை, கொஸ்டரிக்கா மற்றும் ஈக்வடோர் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு உடல் உறுப்புக்கள் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் ஆரோக்கியமான இளைஞர் யுவதிகளின் உடல் உறுப்புக்களுக்கு விலை பேசி, அவற்றை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் குறித்த உக்ரேனியர் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உடல் உறுப்புக்களை விற்பனை செய்ய விரும்பும் நபர்களுக்கு தேவையான கடவுச் சீட்டுக்களைத் தயாரித்து அவர்களை குறித்த நாடுகளுக்கு அழைத்துச் சென்று இந்த வர்த்தகத்தை நடத்தி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சிறுநீரகங்களே அதிகளவில் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
உடல் உறுப்புக்களை தானமாக வழங்குவோருக்கு இலங்கை, ஈக்வடோர் மற்றும் கொஸ்டரிக்க வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நடைபெறுவதாகவும், அவர்களுக்கு பத்தாயிரம் டொலர்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வர்த்தகத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஐந்து முதல் 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
Average Rating