கிளிநொச்சியில் இளம் குடும்பப் பெண், தன் குழந்தையை அணைத்தபடி கிணற்றில் வீழ்ந்து மரணம்!
கிளிநொச்சியில் இளம் குடும்பப் பெண் ஒருவர், தனது 5 வயது ஆண் பிள்ளையை அணைத்தபடி தனது வீட்டுக்கு அருகில் உள்ள வயல் கிணற்றில் வீழ்ந்து இறந்துள்ளார். குஞ்சுப்பரந்தன் கிராமத்தைச் சேர்ந்த சுகுமார் நிசாந்தினி (வயது 30) என்ற பெண்ணே இவ்வாறு தனது பிள்ளையுடன் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் விசாரணைகளை நடத்தி வருகின்றது. எனினும் குறித்த பெண் உயிரிழந்தமைக்கான காரணம் எதுவும் இதுவரை அறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
2ம் இணைப்பு
கிளிநொச்சி குஞ்சிப்பரந்தனில் நீர் நிரம்பியிருந்த குழியொன்றில் இருந்து தாய் மற்றும் மகனின் சடலங்களை இன்று காலை கிளிநொச்சி பொலிஸார் மீட்டுள்ளனர்.
குஞ்சிப்பரந்தனை சேர்ந்த 30 வயதுடைய சுகுமார் நிசாந்தினி மற்றும் அவரது 5 வயதான புதல்வர் கிருத்திகன் ஆகிய இருவருடைய சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. நேற்று மாலை முதல் இருவரையும் காணாத நிலையில் உறவினர்கள் தேடிச் சென்றபோதே வீதி வேலை செய்பவர்களால் தமது தேவைக்காக வெட்டப்பட்ட நீர் நிரம்பிய குழியில் இருந்து இந்த சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.
சடலங்கள் மீட்கப்பட்ட இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதிபதி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலங்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார். அவரின் பணிப்புரையின் பேரில் பிரேத பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Average Rating