சிரிய அதிபர் குடும்பத்தோடு போர்க்கப்பலில் தஞ்சம்: ரஷ்ய கடற்படையினர் பாதுகாப்பு
கடும் உள்நாட்டுப் போர் நடந்து வரும் சூழலில் சிரிய அதிபர் பஸார் அல் ஆசாத் தனது குடும்பத்தினருடன் போர்க் கப்பலில் தஞ்சம் புகுந்துள்ளார். அவருக்கு ரஷ்ய கடற்படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். சிரிய அதிபர் ஆசாத் பதவி விலகக் கோரி பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவின் உதவியோடு ஆயுத, நிதி உதவி பெற்ற குழுக்கள் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தப் போராட்டக்காரர்களுடன் ராணுவம் கடும் மோதலில் ்ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், ஆசாத் தலைநகர் டமாஸ்கஸில் இருந்து குடும்பத்தினருடன் வெளியேறிவிட்டார். அவர் தனது கடற்படையின் போர்க் கப்பலில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். அவருக்கு ரஷ்ய கடற்படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அவ்வப்போது டமாஸ்கஸில் உள்ள அதிபர் மாளிகைக்கு ஹெலிகாப்டரில் வந்து செல்கிறார். சிரியாவின் பல பகுதிகள் போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் வந்து விட்ட நிலையில், அவர்கள் ராணுவத் தாக்குதலையும் மீறி தலைநகரை நோக்கி நகர்ந்து வருவதையடுத்து, தேவைப்பட்டால் ரஷ்யாவுக்கு தப்பிச் செல்ல வசதியாக, போர்க் கப்பலுக்கு இடம் மாறிவிட்டதாகத் தெரிகிறது.
கடந்த 2011 ம் ஆண்டு மார்ச் முதல் அந் நாட்டில் நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் இதுவரை 60,000 பேர் பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இரு தரப்புக்கும் இடையே மாட்டிக் கொண்ட அப்பாவி பொது மக்கள் ஆவர். பஸார் அல் ஆசாத் ஷியா பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ஒடுக்க செளதியும் மறைமுகமாக உதவி வருகிறது.
Average Rating