இலங்கைக் காதலியை திருமணம் செய்வதற்கு விரும்பிய இந்திய இராணுவ மேஜருக்கு பயிற்சி கட்டணத்தை செலுத்துமாறு உத்தரவு
இலங்கைக் காதலியை திருமணம் செய்யவதற்கு விரும்பிய இந்திய இராணுவ மேஜருக்கு பயற்சிக் கட்டணங்களான 16 இலட்சம் ரூபாவினை செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் மீளப் பெற்றப்பட்டதன் பின்னரே அவருக்கான திருமண சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் பெண்ணொருவரை திருமணம் செய்வதற்காக தனது இராணுவ பதவியை ராஜினாமா செய்ய முற்பட்ட இந்திய இராணுவத்தின் மேஜர் பதவிநிலை வகிக்கும் அதிகாரி ஒருவரின் ராஜினாமா கடிதத்தை இராணுவம் ஏற்க மறுத்ததை அடுத்து அவர் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்திய இராணுவத்தின் சமிக்ஞை படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் விகாஸ் குமார் என்பவரே இந்த வழக்கைத் தாக்கல் செய்தவராவார். இராணுவ சமிக்ஞை படைப்பிரிவில் அதிகாரிகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாலும் இலங்கைப் பெண்ணுடன் இவருக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்த வேண்டியிருப்பதாலுமே அவரது ராஜினாமாவை ஏற்க முடியாதுள்ளது என இந்திய இராணுவம் அறிவித்திருந்தது.
இருப்பினும், விகாஸ் குமாரின் ராஜினாமாவை இராணுவம் மறுக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், இந்த தீர்ப்பினை எதிர்த்து இந்திய இராணுவம் மேன்முறையீடு செய்திருந்தது.
மேஜர் விகாஸ் குமாரின் காதலியான இலங்கைப் பெண் அனிலா ரணமாலி குணரத்ன, பெங்களூரில் முதுமாணிப் பட்டக் கற்கை நெறியொன்றை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்யவிருந்தனர்.
இந்திய இராணுவ சட்டப்படி, வெளிநாட்டுப் பிரஜையொருவரை இந்திய இராணுவத்தில் உள்ள ஒருவர் திருமணம் செய்ய முடியாது. இதனாலேயே விகாஸ் குமார், தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார்.
இந்நிலையில், வழக்கை விசாரித்த கர்நாடகா மேல்நீதிமன்றம், வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய இராணுவ மேஜரிடமிருந்து செலவுத் தொகையாக 75,000 ரூபாவை அறிவிட்டுக்கொண்டு அவரை இராணுவ சேவையிலிருந்து விடுவிக்குமாறு பணித்தது.
நீதிமன்றம் இவ்வாறானதொரு உத்தரவினைப் பிறப்பித்ததை அடுத்து விகாஸ் குமாரை இராணுவத்திலிருந்து விடுவிக்க தீர்மானித்த இந்திய இராணுவம், அவருக்கு இந்திய இராணுவ அகடமியில் பயிற்சி வழங்குவதற்காக இராணுவம் செலவிட்ட 16 இலட்சம் ரூபாவினையும் செலுத்திவிட்டே சேவையிலிருந்து விடுதலை பெறுமாறு அறிவித்துள்ளது என பி.ரீ.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
Average Rating