75 ஓட்டங்களை தட்டுத்தடுமாறி எடுத்து வெற்றி பெற்றது இலங்கை
சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று (18) இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 75 என்ற இலகுவான வெற்றியிலக்கை இலங்கை அணி தட்டுத்தடுமாறி அடைந்து வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 26.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 74 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க் மற்றும் டொஹெட்டி ஆகியோர் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களைக் கடந்தனர். ஸ்டார்க் 22 ஓட்டங்களையும் டொஹெட்டி 15 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவான் குலசேகர 10 ஓவர்கள் பந்துவீசி இரண்டு ஓட்டமற்ற ஓவர்கள் அடங்களாக 22 ஓட்டங்களைக் கொடுத்து ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார் குலசேகர ஒருநாள் போட்டிகளில் ஐந்து விக்கெட்களை வீழ்த்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
லசித் மலிங்க 7 ஓவர்கள் பந்துவீசி இரண்டு ஓட்டமற்ற ஓவர்கள் அடங்களாக 14 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு 75 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 75 ஓட்டங்களைப் எடுத்து வெற்றிபெற்றது. கௌசல் பெரேரா 22 ஓட்டங்களையும் தில்ஷான் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதன்படி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணி பந்துவீச்சாளர் நுவான் குலசேகர தெரிவு செய்யப்பட்டார்.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான நான்காது ஒருநாள் போட்டி 20ம் திகதி சிட்னியில் இடம்பெறவுள்ளது.
Average Rating