விஸ்வரூபம் படத்துக்கு ஜனவரி 28 வரை தடை
சென்னை உயர்நீதி மன்றம் நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 28ஆம் நாள்வரை திரையிடப்படக்கூடாது என உத்திரவிட்டிருக்கிறது. இஸ்லாமியர்களை விஸ்வரூபம் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகக் குறைகூறி அதற்குத் தடைவிதிக்கவேண்டுமென்று கோரி பல்வேறு முஸ்லீம் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கவிருப்பதாக அறிவித்ததன் பின்னணியில், தமிழக அரசு, சட்டம் ஒழுங்கினைக் காரணம் காட்டி, நாளை வெள்ளியன்று வெளியாகவிருந்த அத்திரைப்படத்திற்கு இருவாரத்தடை விதித்திருக்கிறது.
தமிழக அரசின் ஆணையினை எதிர்த்து கமல்ஹாசன் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிபதி கே வெங்கட்ராமன் முன் வழக்கு விசாரணைக்கு இன்று வியாழன் வந்தபோது, சட்டம் ஒழுங்குப் பிரச்சினையின் காரணமாகவே இருவாரத்தடை என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது, அரசின் கவலைகளை மனதில் கொண்டு ஜனவரி 27 வரையிலாவது படத்தை வெளியிடுவதை ஒத்திவைக்கலாமா என நீதிபதி கேட்டபோது, அதற்கு கமல்ஹாசன் தரப்பினர் உடன்பட மறுத்துவிட்டனர்.
எக்காட்சி எப்பகுதி ஆட்சேபணைக்குரியது என கமல்ஹாசன் தரப்பில் கேட்கப்பட்ட போது அரசு வழக்கறிஞர் சரியான பதிலெதுவும் தரவியலவில்லை. நீண்ட நேர வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னால் ஜனவரி 26 அன்று திரைப்படத்தைப் பார்த்து விட்டு தனது இறுதித்தீர்ப்பை வெளியிடுவதாகவும், எனவே ஜனவரி 28 வரை விஸ்வரூபம் மீதான தடை தொடரும் எனவும் நீதிபதி வெங்கட்ராமன் கூறிவிட்டார்.
ஏற்கெனவே டிடிஹெச் பிரச்சினையால் வெளியீடு தாமதமாகிப்போனநிலையில் இப்போது கண்டன ஆர்ப்பாட்டங்கள் வெளியிடத் தடை இவையெல்லாம் கமல்ஹாசனுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இலங்கையிலும் இப்படத்தை திரையிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Average Rating