மன்னார் கிளைமோர்த் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தளபதி உட்பட மூன்று போராளிகள் வீரச்சாவு
மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தளபதி உட்பட மூன்று போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். வெள்ளாங்குளம் – துணுக்காய் வீதியில் இன்று சனிக்கிழமை காலை 6 மணிக்கு இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் மகேந்தி என்று அழைக்கப்படும் கெருடாவில் சாவகச்சேரியைச் சொந்த முகவரியாகவும் உதயநகர் மேற்கு உதயநகர் கிளிநொச்சியை தற்போதைய முகவரியாகவும் கொண்ட இராசு மகேந்திரன்,
கலைமாறன் என்று அழைக்கப்படும் மன்னார் வெள்ளாங்குளத்தை சொந்த முகவரியாகவும் வெள்ளாங்குளம கணேசபுரத்தை தற்போதைய முகவரியாகவும் கொண்ட
சுப்பிரமணியம் நந்தகுமார்,
இளங்கோ என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் கைதடி நாவற்குழியை சொந்த முகவரியாகவும் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு மூங்கிலாறு ரகுபதி குடியிருப்புத்திட்டத்தை தற்போதைய முகவரியாகவும் கொண்ட இராசரத்தினம் விவேகானந்தன்,
குட்டிமணி என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டம் 2 ஆம் யுனிட் யோகபுரம் மல்லாவியைச் சேர்ந்த மணியம் மகேஸ்வரன் ஆகிய போராளிகளே வீரச்சாவைடைந்துள்ளனர்.
லெப்.கேணல் மகேந்தி 1980 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு நடந்த ஆனையிறவுச் சமரில் வீரச்சாவை தழுவிய லெப். கேணல் சூட்டி இவரது சகோதரன் ஆவார். 1996 இல் யாழ்ப்பாணம் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட போது ஊடுருவல் தாக்குதலை நடத்தியிருந்தார்.
யாழ். செல்லும் படையணியின் தளபதியாக விளங்கிய இவர், அக்கால கட்டத்தில் யாழ். குடாநாட்டில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினருக்கு சிம்ம செர்ப்பனமாக விளங்கினார். ஓயாத அலைகள் 03 இராணுவ நடவடிக்கையின் போது யாழ். பகுதிகளை கைப்பற்றும் சமரில் முக்கிய பங்காற்றியிருந்தார்.