குட்டைப் பாவாடையும், ஹை ஹீல்ஸ் போடும் பெண்கள் தான் கற்பழிப்பில் சிக்குகிறார்கள்: இங்கிலாந்து எம்.பி பேச்சு!!
டைட்டான உடை, குட்டைப் பாவாடையும் ஹை ஹீல்ஸ் போடும் பெண்களைத்தான் அதிகம் கற்பழிக்கின்றனர் என்று இங்கிலாந்தின் எம்.பி ஒருவர் கூறியுள்ள கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவமும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. பாலியல் வன் கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்ற பேச்சு ஒரு புறம் இருக்க பெண்களின் அணியும் உடைதான் அவர்களை பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்குகிறது என்று கருத்து கூறி வருகின்றனர் சில அதிசய பிறவிகள். கவர்ச்சிகரமான உடை அணிவதும், நள்ளிரவில் பெண்கள் தனியாக போவதும்தான் அவர்கள் கற்பழிப்புக்கு ஆளாகின்றனர் என்று இந்தியாவில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து கூறி நாடு முழுவதும் எதிர்ப்பை வாங்கி கட்டிக்கொண்டனர். இதேபோல் இங்கிலாந்திலும் ஒரு எம்.பி பேசியுள்ளார். டோரி கட்சியைச் சேர்ந்த அந்த எம்.பியின் பெயர் ரிச்சர்டு கிரஹாம். கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டும், ஹை ஹீல்ஸ் போட்டுக் கொண்டும் ராத்திரி நேரத்தில் பாருக்குப் போய் மது அருந்துவதும் பெண்களுக்கு ஆபத்தானது. அதை அவர்கள் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் கற்பழிப்பு போன்றவை நடக்கத்தான் செய்யும் என்றும் அவர் பேசியுள்ளார். எம்.பியின் இந்தப் பேச்சுக்கு கற்பழிப்புக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த ஜோ உட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எம்.பியின் பேச்சு நம்மை 100 ஆண்டுகளுக்குப் பின்னால் கொண்டு போய் விடும் என்று அவர் சாடியுள்ளார். அது சரி கவர்ச்சியான உடை அணிந்தால்தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்றால் 13 வயது பள்ளிச் சிறுமிகள் சுடிதார் அணிந்து கொண்டுதானே பள்ளிக்குச் செல்கின்றனர். அவர்களை ஏன் கற்பழிக்கின்றனர். 5 வயது சிறுமிகள் முதல் 60 வயது முதிய பெண்கள் வரை ஆண்களின் வக்கிரப் பார்வைக்கு தப்ப முடியவில்லையே இதை என்ன சொல்வது?. புடவை அணிந்து கொண்டோ அல்லது உடல் முழுக்க மறைக்கும் ஆடை அணிந்து கொண்டோ செல்லும் பெண்களை மட்டும் எதுவும் செய்யாமல் விட்டுவிடுவார்களா என்ன என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வியாகும்.
Average Rating