மதுரை ஆதீன மடத்திற்குச் செல்ல அனுமதி கோரி நித்தியானந்தா வழக்கு
இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து தன்னை நீக்கியது தவறு என்றும், மதுரை ஆதீன மடத்தில் பூஜைகள் நடத்த தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டு மதுரை நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை ஆதீனத்திற்கு எதிராக மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நித்தியானந்தா புதிதாக 2 வழக்குகளை தாக்கல் செய்தார்.
அவற்றில் முதல் மனுவில், “மதுரையின் 293–வது இளைய ஆதீனமாவேன். என்னை இளைய ஆதீனமாக நியமித்து பல்வேறு பணிகளை செய்யும்படி கூறிய ஆதீனம் திடீரென்று எந்தவித அறிவிப்பும் இல்லாமல், என்னை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி விட்டதாக அறிவித்துள்ளார். மடத்தின் சட்ட விதிகளின்படி இது தவறாகும். எந்த குறைபாடுகளும் இல்லாத நிலையில் என்னிடம் விளக்கம் பெறாமல் என்னை நீக்குவதற்கு மதுரை ஆதீனத்திற்கு உரிமை இல்லை. அத்துடன் இளைய ஆதீனமான நான் மடத்திற்குள் பூஜைகளை நடத்த வேண்டும். ஆனால் நானும், எனது தரப்பினரும் மடத்திற்குள் வருவதற்கு மதுரை ஆதீனம் தடையாக உள்ளார். எனவே என்னையும் என் தரப்பினரையும் மதுரை ஆதீனத்திற்குள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டு உள்ளது.
அதேபோல மற்றொரு மனுவில், ‘‘இளைய ஆதீனமான என்னிடம் கலந்து பேசாமல் திடீரென்று தம்புரான் ஒருவரை மதுரை ஆதீனம் நியமனம் செய்துள்ளார். இதுபோல தம்புரான் நியமிக்கும் வழக்கம் மதுரை ஆதீனத்தின் விதிகளில் இல்லை. எனவே விதிகளுக்கு மாறாக உள்ள அந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.’’ என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த மனுக்கள் நீதிபதி கே.குருவையா முன்பாக விசாரணைக்கு வந்தன. அப்போது ஆதீனம் தரப்பு வக்கீல்கள் வி.நாகேந்திரன், ஜெ.ராமமூர்த்தி ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்குகளுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து நித்தியானந்தா தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 15–ந் திகதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
Average Rating