குழுமோதலை விலக்கச் சென்ற இராணுவத்தினர் மீது தாக்குதல்: யாழ்பாணத்தில் சம்பவம்!
இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலை விலக்கச் சென்ற இராணுவத்தினர் மீது மோதலில் ஈடுபட்ட குழு தாக்கியுள்ள சம்பவம் நேற்றிரவு திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் நேற்றிரவு 7.30 மணியளவில், திருநெல்வேலி சந்தையில் வேலை செய்யும் குழுவொன்றுக்கும் திருநெல்வேலி பாற்பண்ணையில் தொழில் புரியும் மற்றுமொரு குழுவுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
இதனால் இப்பகுதியில் பெரும் பதற்ற நிலைமை உருவாகியுள்ளது. இதன்போது அப்பகுதியில் கடமையிலிருந்து இராணுவத்தினர் குறித்த குழுவினரிடையே ஏற்பட்ட மோதலை விலக்கியுள்ளனர். இதன்பின்னர் குறித்த குழுவினர் இராணுவத்தினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாற குறித்த குழுவினர் இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு மேலதிகமாக இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Average Rating