புலிகளை துரத்திச் சென்ற படகில் உல்லாசமாகச் செல்ல ரூபா500!
இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் முடிந்ததை அடுத்து, கடற்படையில் சும்மா இருக்கும் அதி வேக படகுகளை, பொதுமக்கள் உல்லாசப் பயணம் செய்ய மாற்றி அமைத்திருப்பதாக அறிவித்துள்ளது இலங்கை கடற்படை. “மற்றைய படகுகள் போல அல்லாது, அதி வேகப் படகில் ‘த்ரில்’ பயணம் செய்ய முடியும்” எனவும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த ‘த்ரில்’ பயணத்தை நேற்று ஆரம்பித்து வைத்தார், இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர், சமல் ராஜபக்ஷே (மேலேயுள்ள போட்டோவில் பயணம் செய்பவர்).
இலங்கை தியவன ஏரியில் உல்லாசப் பயணிகளை ஏற்றிச் செல்லும் இந்த படகுகளில், முன்பு கடல் புலிகளின் படகுகளை துரத்திச் செல்ல கடற்படை வேகப் படகுகளில் பொருத்தப்பட்ட இரு 115 hp OBMs இஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு படகிலும் 25 பயணிகள் அமரும் வகையில் சீட்களும், லைஃப் பெல்ட், லைஃப் ஜாக்கெட் வசதிகளும் உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 8 மணியில் இருந்து, மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த சேவைக்கான கட்டணம் ரூ.500 இலிருந்து ஆரம்பிக்கிறது என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளும் இந்த சேவையில் ஈடுபடுத்தப் படுவது பற்றி யோசித்து வருவதாக கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Average Rating