காஷ்மீர ஆயுததாரி அஃப்ஸல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்
டில்லியில் 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்துக்குள் நடந்திருந்த துப்பாக்கித் தாக்குதல் சம்பவத்தில் சதியில் உதவியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த காஷ்மீர ஆயுததாரி அஃப்ஸல் குரு டில்லி அருகேயுள்ள திஹார் சிறையில் வைத்து இன்ற தூக்கிலிடப்பட்டுள்ளார். அஃப்ஸல் குருவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தியால் இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரில் கலவரம் வரலாம் என்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. 2001ம் ஆண்டு டிசெம்பர் 13ம் திகதி துப்பாக்கிதாரிகள் ஐவர் இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்து பொலிஸார் எண்மரையும் தோட்ட பராமரிப்பாளர் ஒருவரையும் சுட்டுக் கொன்றிருந்தனர். பின்னர் அந்த ஆயுததாரிகள் ஐந்து பேரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றிருந்தனர். இத் தாக்குதலுக்கு திட்டமிட்டதில் உதவினார்கள் என்பதற்காக அஃப்ஸல் குருவுக்கும் ஷெளகத் ஹூசைன் என்பவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் ஷெளகத் ஹசைனுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை மேல்முறையீட்டில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக குறைக்கப்பட்டிருந்தது. ஆனால் அஃப்ஸல் குருவின் மேல்முறையீட்டை இந்திய உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்நிலையிலேயே அவர் இன்றுகாலை தூக்கிலிடப்பட்டுள்ளார்.
Average Rating