உண்ணாவிரதப் போராட்டத்தின் மீது தாக்குதல்: யாழில் பதற்றம்
உண்ணாவிரதப்போராட்டத்தின் மீது சிவில் உடையில் வந்த இனந்தெரியாத நபர்களே சற்றுமுன்னர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழு ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டு வெளியேறியதன் பின்னரே அந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்ற ரணில் அங்கு உரையாற்றை நிறைவு செய்தபோது கூட்டத்தில் கூட்டத்தோடு நின்றவர்கள் ஹு சத்தம் எழுப்பியுள்ளனர்.
அவர், தனது உரையை நிறைவு செய்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேறியதன் பின்னர் அந்த இனந்தெரியாத நபர்கள் நால்வரும் உண்ணாவிரதம் நிறைவடைந்து விட்டது சகலரும் எழுந்து செல்லுமாறு பகல் 11.30 மணியளவில் அச்சுறுத்தியதுடன் அவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளையும் கிழித்தெரிந்தனர் என்று எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதன்போது இனந்தெரியாத நபர்களுடன் உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இனந்தெரியாத நபர்களில் ஒருவரை பிடித்து தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துமுள்ளனர்.
மற்றுமொருவர் ஊடகவியாளர்களின் புகைப்பட கருவியொன்றையும் அபகரித்துக்கொண்டு ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்தில் ஒரு பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
Average Rating